செய்திகள்

சென்னையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-12-11 11:10 GMT   |   Update On 2018-12-11 11:10 GMT
திருவாரூர் அருகே சென்னையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

சென்னை உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவருடைய மகன் கவுதமன்(வயது 18). இவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். திருவாரூர் கூட்டுறவு நகரில் லோகநாதன் என்பவரது வீட்டின் மாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி படித்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி இரவு சென்னைக்கு சென்ற அவர் நேற்று காலை திருவாரூர் கூட்டுறவு நகரில் தான் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார்.

கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கவுதமன், நீண்ட நேரமாக வெளியில் வராததால் வீட்டின் உரிமையாளர் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு ஒரு அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் கவுதமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு லோகநாதன் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசாரும், மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் கண்ணன் மற்றும் மருத்துவ மாணவர்களும் விரைந்து வந்தனர். பின்னர் கவுதமனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவுதமனின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கவுதமனின் செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் கவுதமன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News