செய்திகள்

சங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு

Published On 2018-12-06 14:53 GMT   |   Update On 2018-12-06 14:53 GMT
சங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில்:

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48), ரைஸ்மில் அதிபர். இவரது மனைவி வனிதா (36). ராஜபாளையத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். பின்னர் நேற்று மாலை மீண்டும் ஊர் திரும்பினர்.

தம்பதிகள் கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி பகுதியில் வந்த போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பிரபாகரன் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி வனிதா அணிந்திருந்த செயினை கேட்டனர். உடனடியாக அதனை கொடுத்துள்ளனர். பின்னர் மோதிரம், பிற நகைகளையும் கேட்டனர்.

இதற்கு தம்பதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் அரிவாளால் பிரபாகரன் மற்றும் வனிதாவை வெட்டினர். அப்போது அவ்வழியாக ஒரு பேருந்து வந்தது. இதை பார்த்த கொள்ளையர்கள் நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரும் கோவில்பட்டி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதிகளை அரிவாளால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு நகை கடையில் 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் நகை வாங்குவது போல் நடித்து விவரம் கேட்டுள்ளனர். திடீரென கடையில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் கொள்ளையர்களின் உருவங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிரா காட்சிகளில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே பைக்கில் வந்த 3 பேர் என்பதால் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு சூரங்குடி பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

சங்கரன் கோவில் பகுதியில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News