காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 குவாரிகளை திறந்தால் மணல் விலை குறையும் - சங்க தலைவர் யுவராஜ்
சென்னை:
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராஜகோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் சிங்கபெருமாள் கோவிலில் மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்தது. ராஜ கோபாலின் உருவ படத்திற்கு சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சங்க நிர்வாகிகள் சந்தித்து மணல் லாரி உரிமையாளர்கள் தீர்மானத்தின் மனுவை அளித்தோம்.
அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகள் மீது காஞ்சீபுரம் மாவட்ட வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் மூலம் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகளால் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விபத்துக்கள் முலம் அதிக உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
தமிழக அரசு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த மணல் குவாரிகளை அரசு திறந்தால் மணல் விலை அதிக அளவில் குறையும்.
6 சக்கரங்களை கொண்ட லாரிகள் 13 டன் மணல் ஏற்ற வேண்டும். ஆனால் இந்த லாரிகளில் 20 டன் மணல் வரை கொண்டு செல்லப்படுகிறது.
10 சக்கரங்களை கொண்ட லரிகள் 18 டன் மணல் கொண்டு செல்ல வேண்டும். 30 டன் மணல்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அனுமதி அளித்த எடையுள்ள மணலை மட்டும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிம பொருட்களை திருட்டு தனமாக கொண்டு செல்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காதர்மை தீன், அகத்தியன், கணேஷ், சையது உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.