செய்திகள்

நெய்வேலியில் மளிகை கடை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

Published On 2018-12-03 13:54 GMT   |   Update On 2018-12-03 13:54 GMT
நெய்வேலியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 26-வது வட்டம் பாய்லர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு கணேசன் வெளியூருக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மளிகை பொருட்கள் உள்பட பல பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கணேசன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர் வெளியூரில் இருந்து நெய்வேலிக்கு வந்தார். கடைக்கு சென்று கணேசன் பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளைபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன மளிகை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் கணேசன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News