எல்லைப்பிள்ளைச்சாவடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- பெண் பலி
புதுச்சேரி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.(வயது60), விவசாயி. இவருடைய மனைவி பானுமதி (55). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தனர்.
இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவை வழியாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோடு வணிகவரித்துறை அலுவலகம் அருகே வந்த போது பின்னாள் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜூம்-பானுமதியும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் இவர்களை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பானுமதி பரிதாபமாக இறந்து போனார். கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.