செய்திகள்
பண்ருட்டி அருகே கேபிள் டி.வி.ஆபரேட்டரை தாக்கிய லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை
பண்ருட்டி அருகே கேபிள் டி.வி.ஆபரேட்டரை தாக்கிய லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அருள். கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவர் கடந்த 2012 டிச.17-ந் தேதி அன்று அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தாமரைக்கண்ணன் (வயது 30). இவர் தனது வீட்டில் கேபிள் டி.வி சரியாக தெரியவில்லை என கூறி அருளை திட்டி, இரும்பு பைப்பால் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அருள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் அருள் கொடுத்த புகாரின்பேரில் லாரி டிரைவர் தாமரைக்கண்ணனை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த பண்ருட்டி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கணேஷ் லாரி டிரைவர் தாமரைக்கண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3750 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பு வழக்கறிஞராக தேவசுந்தரி ஆஜராகி வாதாடினர்.