கோட்டக்குப்பத்தில் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
சேதராப்பட்டு:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 41). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் முதலியார்பேட்டை போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் பணம் வசூல் செய்வதற்காக மரக்காணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பணத்தை வசூலித்து விட்டு மீண்டும் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கோட்டக்குப்பம் இந்திரா நகர் பகுதியில் வந்த போது, எதிரே வேகமாக வந்த கார் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் திருமணி, சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதும், அவர்கள் சென்னைக்கு சென்றதும் தெரியவந்தது.
மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.