செய்திகள்
நெய்வேலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்.எல்.சி. தொழிலாளி பலி
நெய்வேலியில் மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் என்.எல்.சி. தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்யராஜ் (வயது52). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு நெய்வேலி 7-வது வட்டத்தில் உள்ள பெரியார் சாலை அருகே ஆரோக்யராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் ஆரோக்யராஜின் மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆரோக்ய ராஜ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆரோக்யராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.