பெண்ணாடம் அருகே மழையில் நனைந்தபடி நடந்து சென்ற பெண் வாகனம் மோதி பலி
பெண்ணாடம்:
பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பெண்ணாடத்தை அடுத்த நந்த பாடி கிராமத்தில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மழையில் நனைந்த படி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று திடீரென மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அந்தபெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வாகனம் மோதி இறந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.