நாகர்கோவிலில் மாணவனுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் மீது வழக்கு
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் கோட்டார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் நாகராஜன் (வயது 30) அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியர் நாகராஜன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் நாகராஜன் தலைமறைவாகி உள்ளார்.
கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை மகளிர் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மகளிர் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.