செய்திகள்

காட்பாடியில் போலீஸ் போல் நடித்து ஆசிரியையிடம் 16 பவுன் நகை பறிப்பு

Published On 2018-11-12 11:46 GMT   |   Update On 2018-11-12 11:46 GMT
காட்பாடி மற்றும் ஆம்பூரில் போலீஸ் போல நடித்து 2 பெண்களிடம் 20 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்:

காட்பாடி துரைநகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 53). திருவலத்தில் உள்ள மின் வாரியத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (52). இவர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகின்றார்.

ஜெயந்தி தினமும் வீட்டில் இருந்து சித்தூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது 2 பேர் தங்களை போலீஸ் என்று அறிமுகபடுத்தி கொண்டு நாங்கள் மப்டியில் இருப்பதாக கூறி நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு தனியாக நடந்து சென்றால் யாராவது உங்கள் நகையை பறித்து சென்று விடுவார்கள் எனவே நீங்கள் அணிந்து உள்ள நகைகளை கழட்டி பையில் வைக்குமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய ஜெயந்தி தான் அணிந்திருந்த 16 பவுன் நகையை கழட்டி உள்ளார். அப்போது அவர்கள் நாங்கள் பேப்பரில் மடித்து கொடுப்பதாக கூறி ஒரு பொட்டலத்தை ஜெயந்தி வைத்திருந்த பையில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

சிறுது தூரம் சென்ற ஜெயந்தி பையில் வைத்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி உள்ள கண்காணிப்பு காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவரது மனைவி சுந்தரா (வயது 50). இவர் இன்று காலை ஆம்பூர் மார்க்கெட் சுண்ணாம்புக்கார தெருவில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் தங்களை போலீஸ் என கூறி. சுந்தரா அணிந்திருந்த நகையை கழட்டி பையில் வைக்கும்படி கூறி 4 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் போல நடித்து 2 பெண்களிடம் நகை பறித்து சென்றது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags:    

Similar News