கஜா புயல் - பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ராமேசுவரம்:
வங்கக்கடலில் அந்தமான் அருகே “கஜா” புயல் உருவாகியுள்ளதையொட்டி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக நேற்று காலை பாம்பன் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கஜா புயல் கரையை கடந்த பின் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலுக்கு செல்ல தயாராக இருந்த ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
புயல் காரணமாக மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் கடல் அமைதியுடன் காணப்பட்டது. தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் சீற்றத்துடன் இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் வானிலை மந்தமாக காணப்பட்டது.
இந்த நிலையில் பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கஜா புயல் வலுப்பெற்று வருவதையொட்டி கடலோர காவல் படையினரும், கடலில் ரோந்து சென்று மீனவர்களை எச்சரித்து வருகின்றனர். #Gajastorm #Storm #RedAlert