செய்திகள்

முத்திரையர்பாளையத்தில் வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

Published On 2018-11-09 12:29 GMT   |   Update On 2018-11-09 12:29 GMT
வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு மகன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூர் பம்பு ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயகோபால் (வயது 42).

கூலித்தொழிலாளியான இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும், மணிபாலா (வயது 18) என்ற மகனும் உள்ளனர். வள்ளியும் கூலி வேலைக்கு சென்று வருவார். மணி பாலா 8-ம் வகுப்பு படித்து விட்டு சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த தீபாவளிக்கு முன்பு சில நாட்களாக மணிபாலா வேலைக்கு செல்லவில்லை.

இதுகுறித்து தாய் வள்ளி மகனிடம் தீபாவளி நெருங்கி வருகிறது. அப்பாவும், நானும் வேலைக்கு சென்று வருகிறோம். நீ மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே? என்று கேட்டுள்ளார். இதனால் தாய் - மகன் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மணிபாலா வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தாயிடம் தான் எலிமருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் பதறிப்போன வள்ளி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிபாலா நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்- இன்ஸ் பெக்டர்கள் இனியன், குமார், ஏட்டு சங்கர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News