செய்திகள்

கோபி அருகே தங்கையை துப்பாக்கியால் சுட்ட அண்ணன் கைது

Published On 2018-11-08 10:14 GMT   |   Update On 2018-11-08 10:14 GMT
கோபி அருகே தங்கையை துப்பாக்கியால் சுட்ட பங்காரு சாமியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:

கோபி அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மனைவி நதியா (வயது 28).

தனியார் மில் ஒன்றில் கணேசமூர்த்தி ஊழியராக பணிபுரிகிறார். அதே மில்லில் அவரது மனைவி நதியா கேஷியராக உள்ளார்.

தீபாவளியையொட்டி அதே பகுதியில் உள்ள தனது தந்தை சின்னசாமி வீட்டுக்கு நதியா சென்றார். இவருக்கும் இவரது அண்ணன் பங்காரு சாமிக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பங்காரு சாமிதான் வைத்திருந்த பலூன் சுடும் துப்பாக்கியால் நதியாவை சுட்டார். இதில் அவரது இடது தோள் பட்டையை குண்டு துளைத்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை கண்ட பங்காரு சாமி அங்கிருந்து ஓடிவிட்டார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்த நதியாவை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நதியா வீடு திரும்பினார்.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தங்கையை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய அண்ணன் பங்காருசாமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் பங்காரு சாமியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News