செய்திகள்

வீடு புகுந்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2018-11-05 16:33 GMT   |   Update On 2018-11-05 16:33 GMT
சிறுபாக்கத்தில் ஹெல்மெட் கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். மேலும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டிலும் நகையை அவர்கள் திருடி சென்று விட்டனர்.
சிறுபாக்கம்:

சிறுபாக்கம் அடுத்த விநாயகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சத்தியா(வயது 29). இவர் தீபாவளியை முன்னிட்டு, பொயனப்பாடியில் உள்ள தனது தந்தை செல்வராஜ் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு தீபாவளி பண்டிகைக்காக தேவையான பலகாரங்களை செய்யும் பணியில் சத்தியா மற்றும் அவரது தாய் பொம்மி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் இரவில் பொம்மி தூங்குவதற்காக மேல்மாடிக்கு சென்று விட்டார். கீழ் தளத்தில் சத்தியா அவரது குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு 2.30 மணிக்கு ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம மனிதர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த சத்தியா எழுந்தார். அப்போது 2 பேர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். தொடர்ந்து அவர்கள், சத்தியாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

இதேபோல், அதே தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தனபால் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். தனபால் அதிகாலையில் எழுந்து பார்த்த பிறகு தான் தனது வீட்டில் நகை, பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் ஹெல்மெட் கொள்ளையர்கள், தனபாலின் வீட்டில் திருடிவிட்டு சத்தியாவின் வீட்டுக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். மேலும் தடயவியல் நிபுணர் குமார் நேரில் வந்து தடயங்களை சேகரித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் வழக்குப்பதிவு செய்து, ஹெல்மெட் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஒரே தெருவில் 2 வீடுகளில், ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 
Tags:    

Similar News