செய்திகள்
விழாவில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் சான்றிதழ் வழங்கினார்.

ஊழலை எதிர்த்தபோதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன்- ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேச்சு

Published On 2018-11-03 04:51 GMT   |   Update On 2018-11-03 04:51 GMT
ஊழலை எதிர்த்த போதெல்லாம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் பேசினார். #IASOfficer #Sagayam
கோவை:

கோவை ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29 முதல் நவ.3 வரை அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊழலை ஒழிப்போம்; நாட்டை உயர்த்துவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலக அரங்கில் நடந்தது.

இதில் சென்னை அறிவியல் நகர துணைத்தலைவரான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-

அரசு நிர்வாக பொறுப்பில் இருந்து கொண்டு நேர்மையாக இருப்பது என்பது எளிதான காரியமல்ல. நேர்மையானவர்கள் நிராகரிப்பு, புறக்கணிப்பு, இடமாற்றம் உள்ளிட்ட பல எதிர்மறை விளைவுகளுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அரசுத்துறையில் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

நம் நாட்டில் ஊழல் என்பது ஆழமாக பரவி விட்டது. அதை அழிக்க வேண்டியது இளைஞர்களின் கடமை, ஊழலை எதிர்த்த போதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன். தூக்கியடிக்கப்பட்டேன். இருந்தும் என் கடமையிலிருந்து நான் விலகவில்லை. ஆய்வு ஒன்றின்படி 92 சதவீத இந்திய மக்கள் வாழ்வின் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக லஞ்சம் கொடுத்துள்ளார்கள். உலக நாடுகளில் ஊழல் அதிகம் அரங்கேறும் நாடுகளுக்கான ஆய்வு பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் உள்ளது.

இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். பள்ளி பாடபுத்தகத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து பாடங்களை சேர்க்க வேண்டியது அவசியம். நேர்மை என்ற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே விதைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஊழல் ஒழிப்பை மையமாக கொண்டு கட்டுரை, ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.எஸ்.டி.கமி‌ஷனர் ஸ்ரீனிவாசராவ், கமி‌ஷனர் (தணிக்கை) குமரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.  #IASOfficer #Sagayam
Tags:    

Similar News