செய்திகள்

திருப்பூரில் கணவன் - மனைவி தற்கொலை

Published On 2018-11-02 10:13 GMT   |   Update On 2018-11-02 10:13 GMT
திருப்பூரில் குடும்ப தகராறில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தென்னவன்(38).இவரது மனைவி கவிதா(32). இவர்கள் 2 பேரும் திருப்பூர் குமாரானந்தபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தனர். தென்னவன் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கவிதா பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

தென்னவனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்தது.

இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் கவிதா மன உளைச்சலில் இருந்தார். மேலும் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்படுவது அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

நேற்று தென்னவன் வெளியே சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா வி‌ஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே இறந்தார்.

வெளியே சென்ற தென்னவன் வீடு திரும்பியபோது மனைவி தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டை உள் பக்கம் பூட்டி கொண்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை வெகு நேரமாகியும் தென்னவன் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது தென்னவன் தூக்கில் தொங்குவதையும், கவிதா பிணமாக கிடந்ததையும் கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து திருபூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிகக்ப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்த தென்னவன் - கவிதாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வேலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.

கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் குமாரானந்த புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News