செய்திகள்

அனைத்து கிராமங்களிலும் காய்ச்சல் தடுப்பு முகாம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2018-10-28 16:07 GMT   |   Update On 2018-10-28 16:07 GMT
மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒரு மாதம் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:

மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதையொட்டி 36 வாகனங்களில் மருத்துவ குழுவினர் கிராமம் கிரமமாக சென்று மருத்தவ பரிசோதனை செய்ய உள்ளனர். முகாம் தொடக்க விழா சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். சுகாதரத்துறை இணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி வரவேற்றார்.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:- மழைக்காலம் தொடங்க உள்ளால் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொசுக்கள் பரவாமல் தடுக்க உள்ளாட்சித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது இவர்களுடன் மருத்துவ துறையும் இணைந்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்ய 36 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் மருந்தாளுனர் மற்றும் சமுதாயநல செவிலியர் ஆகியோர் இருப்பார்கள்.

இவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று முகாமிட்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து வழங்குவார்கள். இந்த முகாம் ஒரு மாதம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பூச்சியல் வல்லுனர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் மோகன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News