ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
ஈரோடு:
ஈரோடு கீழ் திண்டல் நல்லியம்பாளையம், பாலாஜி ஆர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 51).
சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று வழக்கம் போல் ரவி வேலைக்கு சென்றுவிட்டார்.
அவரது மனைவியும் 2 மகள்களும் ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நேற்று இரவு ரவி வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ள 2 பீரோக்கள் கதவு திறந்து துணிகள் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரவி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.
கொள்ளை நடந்த வீட்டிலும் அந்த பகுதியிலும் சி.சி.டி.வி. கேமிரா இருக்கிறதா? என்று போலீசார் பார்த்தனர். ஆனால் கேமிரா பொருத்தப்படவில்லை.
இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு தாலுகா போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.