செய்திகள்

காட்பாடியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன

Published On 2018-10-25 18:26 GMT   |   Update On 2018-10-25 18:26 GMT
காட்பாடியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது.
வேலூர்:

காட்பாடி சத்யா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் தச்சுத் தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா (வயது 24). இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சத்தியா 3-வதாக கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்தியாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 8 மணியளவில் மணிவண்ணன் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

அதில் சத்தியாவை ஏற்றிக்கொண்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சை சரவணன் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் வித்யா உடனிருந்தார். வீட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சத்தியாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

உடனே ஆம்புலன்சை அங்கேயே நிறுத்தி சத்தியாவுக்கு மருத்துவ உதவியாளர் வித்யா பிரசவம் பார்த்தார். சத்தியாவுக்கு ஆம்புலன்சிலேயே இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டும் பெண் குழந்தைகள்.

உடனடியாக சத்தியாவும், குழந்தைகளும் வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 2 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News