செய்திகள்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published On 2018-10-21 16:51 GMT   |   Update On 2018-10-21 16:51 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்ச எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival

கரூர்:

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் குற்றசாட்டு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நலன் கருதி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சி பகுதிகளில் காலதாமதம் இல்லாமல் பஸ்கள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை கால பயணத்தை மக்கள் சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்த அந்த சங்கத்தினருக்கு தெரிவித்து உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்களில் இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival 

Tags:    

Similar News