செய்திகள்
வேலூரில் ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றவர் கைது
வேலூரில் ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இவர், ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று அவரது கம்ப்யூட்டர் மையத்தில் சோதனை செய்தனர். அப்போது ராஜேஷ்குமார் தனது சொந்தக்கணக்கில் தட்கலில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் 43 ரெயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 4 ஆயிரமாகும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.