செய்திகள்

பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது- நண்பர் கைது

Published On 2018-10-17 08:47 GMT   |   Update On 2018-10-17 08:47 GMT
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மர்மமான முறையில் வாலிபர் கொல்லபட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் கடந்த 13-ந் தேதி வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் பல்லாவரத்தை சேர்ந்த வடிவேல் (வயது 40) என்பது தெரிந்தது. பண பிரச்சினையில் வடிவேலை நண்பரான பல்லாவரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து ராஜியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நானும், வடிவேலும் நண்பர்கள். எனக்கும் அவருக்கும் ஆட்டோ வாடகை மற்றும் ஆட்டோ வாங்கி விற்கும் தொழிலில் கொடுக்கல் வாங்கள் பிரச்சினை இருந்து வந்தது.

நாங்கள் அடிக்கடி கோவளம் சென்று மது அருந்தி விட்டு விலைமாதுகளுடன் உல்லாசமாக இருப்போம். இதேபோல் சம்பவத்தன்றும் கோவளம் சென்றுவிட்டு அங்கிருந்து மாமல்லபுரம் சென்றோம்.

வழியில் சூலேரிக்காடு அருகில் மது அருந்தும் போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேலை கழுத்தை நெரித்து கொன்றேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று ராஜியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News