செய்திகள்

கஞ்சா போதையில் பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற வாலிபர் சிக்கினார்

Published On 2018-10-14 16:48 GMT   |   Update On 2018-10-14 16:48 GMT
கஞ்சா போதையில் பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாசம். இவரது மனைவி கலைவாணி (வயது 40).

இவர் புதுவை புஸ்சி வீதியில் உள்ள தனியார் ரெஸ்டாரெண்ட் ஓட்டலில் துப்புரவு ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் தினமும் சைக்கிளில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.

அதுபோல் கடந்த 7-ந் தேதி மாலை வேலை முடிந்து சம்பள பணம் ரூ.10 ஆயிரத்தை வாங்கி லெதர் பேக்கில் வைத்து அதனை சைக்கிளின் முன் பக்க கூடையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

நைனார் மண்டபத்தில் வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென கலைவாணியை வழிமறித்து சைக்கிள் கூடையில் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

அந்த பையில் ரொக்க பணம் ரூ.10 ஆயிரத்துடன் தனது செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றையும் கலைவாணி வைத்திருந்தார்.

இதுகுறித்து கலைவாணி முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பணப்பையை பறித்து சென்ற இடத்தில் பொறுத்தி இருந்த சி.சி.டி. கேமராவை ஆய்வு செய்த போது பணப்பையை பறித்தவரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர்.

இதன் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த மோட்டார் சைக்கிள் புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் என்ற மவுலி (20) என்பவருக்கு சொந்தமானது தெரியவந்தது.

இதையடுத்து மவுலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பணப்பையை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். கஞ்சா போதையில் பணப் பையை பறித்து சென்றதாக போலீசாரிடம் மவுலி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மவுலியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலைவாணிக்கு சொந்தமான ரூ.10 ஆயிரத்துடன் கூடிய லெதர் பேக், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News