செய்திகள்

வேலூரில் விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமிக்கு நடுரோட்டில் அடி, உதை- வங்காளதேச பெண் கைது

Published On 2018-10-13 11:22 GMT   |   Update On 2018-10-13 11:22 GMT
வேலூரில் விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமியை நடுரோட்டில் அடித்து உதைத்த வங்காளதேச பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வங்காளதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா (வயது 30). இவர் அங்குள்ள 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக கூறி வேலூருக்கு அழைத்து வந்தார்.

வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்ற போகிறோம் என்ற ஆசையில் வேலூர் வந்த சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுமியை வேலூரில் உள்ள லாட்ஜில் தங்க வைத்த முஸ்கானா சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்தினார்.அதற்கு சிறுமி மறுத்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபட மிரட்டினார். அங்கிருந்து தப்பிய சிறுமி கிருஷ்ணா தியேட்டர் அருகே ஓடி சென்றார்.

அவரை பின் தொடர்ந்து சென்ற முஸ்கானா சிறுமியை மடக்கி பிடித்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.

இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முஸ்கானாவை கைது செய்தனர்.

மேலும் அவரது பாஸ்போர்ட் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News