செய்திகள்

நக்கீரன் ஊழியர்களை 25ம் தேதி வரை கைது செய்யமாட்டோம் - ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

Published On 2018-10-12 08:35 GMT   |   Update On 2018-10-12 08:35 GMT
ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் நக்கீரன் ஊழியர்களை வரும் 25-ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees
சென்னை:

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி நக்கீரனில் கட்டுரை வெளியானது. இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் நக்கீரன் அலுவலக ஊழியர்கள் மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நக்கீரன் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.



இந்நிலையில் ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சிய நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது,  ஆளுநரின் துணை செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவதூறு வழக்குதான் பதிவு செய்ய முடியுமே தவிர, 124-வது சட்டப்பிரிவின்கீழ் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? என நீதிபதி தண்டபாணி கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக நக்கீரன் ஊழியர்களை வரும் 25ம் தேதி வரை  கைது செய்யமாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees
Tags:    

Similar News