செய்திகள்

சொத்தை பிரித்து தர தாய் மறுப்பு: வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-10-11 13:27 GMT   |   Update On 2018-10-11 13:27 GMT
ரெட்டியார் பாளையத்தில் சொத்தை பிரித்து தர தாய் மறுத்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை எல்லைப் பிள்ளைசாவடி வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு 4 மகன்கள்.

மூத்த மகன் மணிகண்டன் (வயது 26). கட்டிட வேலை செய்து வந்த இவர் தனது மாமன் மகளை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்தார்.

பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து மணிகண்டன் தனது மனைவியுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இரவில் மட்டும் அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மணிகண்டன் மனைவியுடன் தூங்க செல்வார்.

இதற்கிடையே மணிகண்டன் தனது தாய் அஞ்சலையிடம் வீட்டை பாக பிரிவினை செய்து தரும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால், அதற்கு அஞ்சலை சம்மதிக்கவில்லை.

மற்ற மகன்கள் 3 பேருக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு வீட்டை பாகம் பிரித்து தருவதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மணிகண்டன் மது குடித்து விட்டு தனது தாய் அஞ்சலையிடம் வீட்டை பாகம் பிரித்து தருமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், இதற்கு அஞ்சலை மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இரவு நேரத்தில் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்ற மணி கண்டன் அங்கு மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News