செய்திகள்

திருநாவலூர் அருகே விபத்து- 2 போலீஸ்காரர்கள் படுகாயம்

Published On 2018-10-05 10:20 GMT   |   Update On 2018-10-05 10:20 GMT
திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக அப்துல்சலீம் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இதேபோலீஸ் நிலையத்தில் சத்யராஜ் (32) என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருவெண்ணைநல்லூரை அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.

பின்னர் அங்கு பணியை முடித்து கொண்டு உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அப்துல்சலீம் ஓட்டி வந்தார்.

பெரியசெவலை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அப்துல்சலீம், சத்ய ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News