செய்திகள்

சாலிகிராமத்தில் ஓட்டல் ஊழியர் ஆட்டோவில் கடத்தல்- மனைவி போலீசில் புகார்

Published On 2018-10-05 08:37 GMT   |   Update On 2018-10-05 08:37 GMT
சாலிகிராமத்தில் ஓட்டல் ஊழியரை மர்ம கும்பல் தாக்கி ஆட்டோவில் கடத்தி சென்றனர். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

போரூர்:

சாலிகிராமம், ஸ்டேட் பாங்க் காலனி, 2-வது தெருவில் வசித்து வருபவர் இம்ரான் (வயது 25). இவரது மனைவி சரஸ்வதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இம்ரான் திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு வந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அதிகாலை இம்ரான் வீட்டுக்கு ஆட்டோவில் மர்ம வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இம்ரானை வெளியே அழைத்து திடீரென சரமாரியாக தாக்கினர்.

மேலும் அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என்று கூறி மர்மகும்பல் கணவர் இம்ரானை கடத்தி சென்று உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

இம்ரான், திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்த போது ஏதேனும் தகராறு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். அங்கு வேறு யாருடனும் ஏற்பட்ட மோதலில் அவரை மர்ம கும்பல் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே வீட்டில் இருந்த இம்ரானை மர்ம நபர்கள் தாக்கி கடத்தி செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி கடத்தல் கும்பல் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News