செய்திகள்

வி.களத்தூரில் 144 தடை உத்தரவால் கோவில் திருவிழா ரத்து

Published On 2018-10-01 16:11 GMT   |   Update On 2018-10-01 16:11 GMT
வி.களத்தூரில் 144 தடை உத்தரவால் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோவிலில் திருவிழாவை ஒரு பிரிவினர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடத்துவது எனவும், இதனைத்தொடர்ந்து 3 நாட்கள் சுவாமி வீதி உலா நடத்துவது எனவும் முடிவு செய்திருந்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எங்கள் தெருவழியாக கடந்த ஆண்டு நடத்தியது போல ஒரு நாள் மட்டுமே சுவாமி வீதியுலா நடத்த வேண்டும். மூன்று நாட்கள் வீதி உலா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருபிரிவி னரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் கடந்த ஆண்டைப்போலவே ஒரு நாள் மட்டும் சுவாமி வீதி உலா நடத்த வேண்டும். மேலும் வழக்கமாக செல்லும் தெருக்களில் சுவாமி வீதி உலா செல்லாமல், மற்றொரு தெரு வழியாக சுவாமி வீதி உலா நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.



இதனால் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. திருவிழாவை நடத்தும் பிரிவினர் திட்டமிட்டப்படி நாங்கள் ஆண்டாண்டு காலமாக எப்படி சுவாமி வீதி உலா நடந்ததோஅதேபோல் தற்போதைய திருவிழாவின் போதும் 3 நாட்களும் சுவாமி வீதிஉலா நடத்தியே தீருவோம் என திருவிழாவிற்கான ஏற்பாடு களைசெய்ய தொடங் கினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற் பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு பெரம்பலூர் உதவி கலெக்டர் விசுவநாதன் வி.களத்தூரில் 28-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை 144 தடை உத்தரவு போட்டுள்ளார்.

தடை உத்தரவு காலங்களில் உள்ள நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த திருவிழா நடத்தும் தரப்பினர் சுவாமி திருவீதி உலா நடத்தும் நிகழ்ச்சியையும், மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியையும் முற்றிலுமாக ரத்து செய்தனர். 144 தடை உத்தரவினால் திருவிழா பாதியிலேயே நின்றது. நேற்று கோவில் வளாகங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வி.களத்தூர் கடைவீதி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தெருக்களில் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது. 
Tags:    

Similar News