செய்திகள்

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2018-10-01 16:00 GMT   |   Update On 2018-10-01 16:00 GMT
புதுக்கோட்டை எழில்நகரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை எழில் நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 79). ஓய்வு பெற்ற ஆசிரியரான, இவர் தனது 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். மேலும் சுகுமாரின் மனைவி இறந்து விட்டதால், எழில்நகரில் உள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டுப்போட்டு பூட்டி விட்டு, தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சுகுமார் சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று காலையில் சுகுமாரின் மூத்த மருமகன் மனோஜ் சசிக்குமார், எழில்நகரில் உள்ள தனது மாமனார் சுகுமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது, வீட்டின் ஒரு அறையில் பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது. மேலும் அதில் இருந்த 17 பவுன்நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து சுகுமாருக்கும், புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கும் மனோஜ் சசிக்குமார் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடங்களை சேகரிக்கப்பட்டது.. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 17 பவுன் தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் எழில்நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
Tags:    

Similar News