செய்திகள்
செய்யாறு அருகே பைக் விபத்தில் தந்தை பலி- மகன் படுகாயம்
செய்யாறு அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் தந்தை பலியானார். மகன் பலத்த காயமடைந்தார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சூர்யா (22). இருவரும் தங்கள் கிராமத்தில் இருந்து பைக்கில் தூளி என்ற பகுதிக்கு சென்றனர். பைக்கை சூர்யா ஓட்டினார். பின்னால் தந்தை அமர்ந்திருந்தார்.
காயத்ரி நகர் சிறுபாலம் மீது சென்ற போது மேடு பள்ளத்தில் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தந்தையும், மகனும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், சேகர் மட்டும் சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூர்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பற்றி செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.