செய்திகள்

கண்ணமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்த மாணவன் பலி

Published On 2018-09-29 21:32 IST   |   Update On 2018-09-29 21:32:00 IST
கண்ணமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக இறந்தான். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் டெல்லிகணேஷ் (வயது 11). நீலகண்டன் இறந்து விட்டார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் டெல்லிகணேஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று கோமதி 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து டெல்லிகணேசும், அவரது சித்தப்பா பலராமனின் மகன் உமாபதி (10) என்பவரும் அந்த ஊரில் உள்ள ஏரியில் விளையாடச் சென்றனர். அப்போது திடீரென இருவரும் தண்ணீரில் தவறி விழுந்தனர்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி டெல்லிகணேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். உமாபதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News