செய்திகள்

அவதூறு வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

Published On 2018-09-28 06:08 GMT   |   Update On 2018-09-28 06:08 GMT
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #KarunasMLA #Karunas #EgmoreCourt
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், கருணாஸ் எம்எல்ஏவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கருணாசுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் கருணாஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இந்த வழக்கில் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ கருணாஸ், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது.

அவதூறு வழக்கில் தற்போது ஜாமீன் கிடைத்தாலும் இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால்தான் கருணாஸ் எம்எல்ஏவால் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியும். #KarunasMLA #Karunas #EgmoreCourt
Tags:    

Similar News