கணவர் குடிப்பழக்கத்தால் விரக்தி-இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கோவை:
கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் மணியன் (வயது 40). இவரது மனைவி பானு (35). இருவரும் கட்டிடத்தொழிலாளர்கள். இவர்களுக்கு பள்ளி செல்லும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மணியன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். மனைவி மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார். சில நேரங்களில் மனைவி வாங்கி வரும் சாம்பளத்தையும் மதுக்குடிக்க வாங்கினார். இதனால் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை கட்டமுடியாமல் தவித்தார்.
கணவரை வேலைக்கு செல்லும்மாறு மனைவி வற்புறுத்தினார். ஆனால் மணியன் இன்று நாளை என்று காலம் கடத்தி வந்தார். இதனால் விரக்தியடைந்த பானு நேற்று இரவு தூக்குப்போட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணியன் ஓடிச்சென்று தூக்கில் தொங்கிய மனைவியை மீட்டு கயிற்றை அறுத்து எறிந்தார். பின்னர் மனைவியை சமாதானம் செய்து வைத்தார். இன்று காலை எழுந்து பார்த்தபோது பானு தூக்கில் பிணமாக தொங்கினார்.
தூங்கிய பின்னர் பானு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.