செய்திகள்

வத்தலக்குண்டுவில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி

Published On 2018-09-26 09:51 GMT   |   Update On 2018-09-26 09:51 GMT
வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர்கள் பலியாகினர். இது குறித்து விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு செம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் வெற்றி (வயது 18). அதே பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் அருண் (17). இவர்கள் 2 பேரும் லாரி கிளீனர் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு தங்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் போதையில் ஒரே மோட்டார் சைக்கிளில் இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இவர் வத்தலக்குண்டுவில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

குடிபோதையில் வந்த வாலிபர்கள் பழனிக்குமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினர். இதில் வெற்றி மற்றும் பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருண் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பழனிக்குமாருக்கு அருணாதேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குடிபோதையில் ஏற்பட்ட விபத்தால் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News