செய்திகள்

பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்த ஓட்டல் மேலாளர் தவறி விழுந்து பலி

Published On 2018-09-22 16:43 GMT   |   Update On 2018-09-22 16:43 GMT
காரிமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து ஓட்டல் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜ் தர்மபுரியில் இருந்து செல்லும் அரசு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் பஸ்சின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்ததாக தெரிகிறது. காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு இருந்தார். பின்னர் பஸ் புறப்பட்ட போது கனகராஜ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News