செய்திகள்

மத்தூர் அருகே விபத்தில் என்ஜினீயர் பலி

Published On 2018-09-18 04:52 GMT   |   Update On 2018-09-18 04:52 GMT
மத்தூர் அருகே விபத்தில் என்ஜினீயர் பலியானதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #accident

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த ஆலரஅள்ளியை சேர்ந்தவர் குமரேசன் (வயது22). என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அஜித் (21), வினோத் (20).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு காலை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மத்தூரை அடுத்த சிவம்பட்டி ஏரிக்கரையோரம் சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் குமரேசன் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு சென்றனர். அவர்கள் பள்ளி நுழைவுவாயில் கதவை உடைத்தனர். மேலும் பள்ளியில் உள்ள கண்ணாடிகளை அடித்து உடைத்து டிப்பர் லாரியை வெளியே கொண்டு வர சொன்னார்கள்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிவம்பட்டியில் இருந்து மாற்று வழியில் திருப்பத்தூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து மத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ஜனார்த்தனை கைது செய்தனர்.

பின்னர் சாலை மறியலில் போலீசாரை தாக்க முயன்றதாகவும், போலீசாரை தரக் குறைவாக பேசியதாகவும் சின்னஆலர அள்ளி பகுதியை சேர்ந்த ராஜலிங்கம், புகழேந்தி, கவியரசன், அருண் பாண்டியன், சிவா, வெங்கடேசன் உள்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News