செய்திகள்
திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்து எழும்பூர் கோர்ட் உத்தரவு
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (UAPA) ரத்து செய்து சென்னை எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ThirumuruganGandhi #May17 #UAPA
சென்னை:
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார்.
நார்வேயிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.
இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, அவர் மீது UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் திருமுருகன் காந்தியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.
அப்போது, அவர் மீது போடப்பட்ட UAPA வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.