செய்திகள்

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

Published On 2018-09-15 10:21 GMT   |   Update On 2018-09-15 10:21 GMT
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா, சமுதாய வளைகாப்பு விழா மற்றும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் சிவஞானம், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வளர் இளம் பெண்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் 240 கர்ப்பிணி பெண்களுக்கு, வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

அடுத்ததாக நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 119 உழைக்கும் மகளிருக்கு ரூ. 29.75 லட்சம் மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள், 61 மாற்று திறனாளிகளுக்கு ரூ. 35.89 லட்சம் மதிப்புள்ள விலையற்ற இரு சக்கர வாகனங்கள், கிராமங்களை சேர்ந்த 84 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க ரூ. 3.08 கோடி வங்கி கடன் உத்தரவுகளையும், நகராட்சியை சேர்ந்த 7 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள சூழல் நிதிக்கான காசோலையையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சிறப்புரையாற்றும் போது, 42 வார்டுகள் கொண்ட ராஜபாளையம் நகராட்சியை 60 வார்டுகளாக மாற்றும் அளவு மக்கள் தொகை அதிகம் உடையது.

இந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் இரு பெரும் கோரிக்கைள், தாமிரபரணி கூட்டு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம்.

இதில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெறும் என்றார்.

Tags:    

Similar News