செய்திகள்
தக்கலை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை அருகே உடல் பருமனாக இருந்ததை கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே திக்கணங்கோடு கீழ தாரவிளையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஆஷா, (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனாக இருந்த ஆஷாவை பள்ளி மாணவிகளும், அக்கம் பக்கத்தினரும் கேலி, கிண்டல் செய்து வந்தனர். இதனால் ஆஷா மனம் உடைந்து காணப்பட்டார்.
நேற்று ஆஷா வீட்டின் ஒரு அறையில் இருந்தார். அப்போது அந்த அறையில் இருந்து ஆஷாவின் குரல் கேட்டது. இதையடுத்து அவரது தந்தை தேவராஜ் ஓடிச்சென்று பார்த்தபோது ஆஷா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தூக்கில் தொங்கிய ஆஷாவை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தக்கலை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தேவராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.