செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அதிகாரி வராததை கண்டித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

Published On 2018-09-11 14:44 GMT   |   Update On 2018-09-11 14:44 GMT
தஞ்சை ஆர் டி ஓ அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அதிகாரி வராததை கண்டித்து கருகிய பயிற்களை கைகளில் எந்தி விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக தஞ்சை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்.டி.ஓ. ஏலுவலத்துக்கு முன்பு திரண்டு இருந்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம், ஆர்.டி.ஓ. சுரேஷ் வராததால் நடைபெறாமல் இருந்தது. நேரம் செல்ல.. செல்ல விவசாயிகளும் மனம் தளராமல் காத்து கொண்டு இருந்தனர்.

பின்னர் மதியம் 12 மணியை தாண்டியும் ஆர்.டி.ஓ. வராததால் விவசாயிகள் பொறுமை இழந்தனர்.

இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள், காய்ந்த பயிர்களை கைகளில் ஏந்தி கொண்டு அதிகாரியை கண்டித்து கோ‌ஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கர்நாடக அரசிடம் 1 டி.எம்.சி. தண்ணீருக்காக காத்திருந்தோம். தற்போது மேட்டூர் அணை 3 முறை நிரம்பி உள்ளது. ஆனால் எத்தனையோ டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. அந்த தண்ணீரை சேமிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தற்போது உழவுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தண்ணீர் தேவையான நேரத்தில் கடைமடை பகுதிகள் எல்லாம் காய்ந்து போனது.

முக்கொம்பு அணையை சீரமைக்கிறோம் என்று தண்ணீரை திறக்க மறுக்கிறார்கள். பயிர்கள் காய்ந்து வருவதால் இன்று அதிகாரியை சந்தித்து முறையிடலாம் என்று வந்தோம் . ஆனால் 12 மணியை தாண்டியும் அதிகாரியை காணவில்லை. டெல்டா மாவட்டங்களை காப்பாற்ற கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News