செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை - இடிதாக்கி பெண் பலி

Published On 2018-09-11 08:57 GMT   |   Update On 2018-09-11 08:57 GMT
ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்த போது இடிதாக்கி பெண் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்தது. சுட்டெரித்த வெயிலால் வெளியே நடமாட முடியாத நிலை இருந்தது.

வெயிலால் வாட்டி எடுத்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக சத்தியமங்கலம் பகுதியில் 42 மி.மீ.மழை கொட்டியது.

இந்த மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதியில் மழை நீர் ஓடியது.

இதே போல் பவானியில் 38 மி.மீ.மழை பெய்தது. இந்த மழையால் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

மேலும் கவுந்தப்பாடி, கோபி, ஒலப்பாளையம், சிவகிரி ஆகிய பகுதிகளிலும் ஓரளவு கனமழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையால் வெயிலின் ஆதிக்கம் குறைந்திருந்தது.

பவானிசாகர் அருகே பசுவபாளையத்தில் உள்ள தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பிரியா (வயது 30) என்ற பெண் இரவு 8 மணி அளவில் மல்லிகை பூ பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது லேசாக மழை பெய்தது. தொடர்ந்து அந்த பெண் பூ பறித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஒரு இடி பிரியாவை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவர் உடல் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News