செய்திகள்

கடைமடையை தொடாத காவிரிநீர் - 20 ஆயிரம் எக்டேர் சம்பா கருகும் அபாயம் - விவசாயிகள் வேதனை

Published On 2018-09-07 11:02 GMT   |   Update On 2018-09-07 11:02 GMT
கடைமடை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால் தான் சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #MetturDam

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், வடமழை, மணக்காடு, மகாராஜபுரம், செட்டிபுலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைமடை பாசன பகுதி கிராமங்களுக்கு வெண்ணாற்றில் தண்ணீர் சரிவர வராததால் சம்பா சாகுபடி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை 4 முறை நிரம்பிய நிலையில் கடைமடைக்கு கூடுதலாக தண்ணீர் வரும் என்று விவசாயிகள் நினைத்து இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் ஹெக்டரில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். ஒரு முறை மட்டுமே வந்த தண்ணீரை வயல்களில் வைத்து நெற்பயிர்கள் முளைத்து விட்டன. நெற்பயிர்கள் முளைத்து 25நாள் ஆகிய நிலையில் ஆற்றில் தண்ணீர் வராததால் சம்பா கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கடைமடை பாசனத்திற்கு வந்த ஆற்று நீர் நின்று விட்டது. ஆற்றில் தண்ணீர் மிக குறைவாக உள்ளதால் மோட்டார் மூலம் இறைத்து கூட விவசாயம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர். எனவே உடனடியாக தமிழக அரசு கடைமடை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால் தான் சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக சம்பா சாகுபடி பொய்த்து விட்ட நிலையில் இந்த ஆண்டாவது சம்பா சாகுபடி இருக்கும் என்று நினைத்த நிலையில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் சம்பா சாகுபடி பொய்து விடும் நிலை எற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். #MetturDam

Tags:    

Similar News