செய்திகள்

திருவான்மியூரில் கார் கொள்ளையர்கள் 2 பேர் கைது

Published On 2018-09-05 08:47 GMT   |   Update On 2018-09-05 08:47 GMT
திருவான்மியூரில் கார் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

சோழிங்கநல்லூர்:

திருவான்மியூர், அஷ்ட லட்சுமி கோவில் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் வீட்டு முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மர்ம நபர்கள் காரை திருடி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே திருடப்பட்ட கார் கொட்டிவாக்கம் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர்.

உடனே காரில் இருந்த 2 வாலிபர்களும் வேகமாக செல்ல முயன்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் அதில் இருந்த 2 வாலிபர்களும் தப்பி செல்ல முடியவில்லை. அவர்களை போலீசார் கைது செய்து காரை மீட்டனர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் பெசன்ட் நகரை சேர்ந்த அய்யனார், சரண் என்பது தெரிந்தது. பழைய குற்றவாளிகளான அவர்கள் பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

கைதான 2 பேரையும் போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News