சோழத்தரம் அருகே உதவி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள அகர புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகள் பாலா (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலா சொந்த ஊர் வந்திருந்தார். திடீரென்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்ட கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பாலா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சோழத்தரம் போலீசில் பாலாவின் தாயார் சாந்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.