செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே தூக்கில் இளம்பெண் பிணம்- சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்

Published On 2018-09-03 12:04 GMT   |   Update On 2018-09-03 12:04 GMT
நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பத்தை அடுத்த கொங்கராயனூரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 28). கார் டிரைவர். இவரும், அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்த கவிப் பிரியா (24) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் சுதியன் என்ற மகன் உள்ளான்.

நேற்று சவாரிக்காக காரில் வீரக்குமார் வெளியூருக்கு சென்றிருந்தார். வீட்டில் தனிமையில் இருந்த கவிப்பிரியா திடீரென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வீரக்குமாருக்கும், கவிப்பிரியாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே கவிப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொங்கரையானூர் வந்தனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய கவிப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று கவிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து கவிப்பிரியாவின் பெற்றோர் போலீசில் அளித்துள்ள புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News