செய்திகள்

போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

Published On 2018-09-03 11:57 GMT   |   Update On 2018-09-03 11:57 GMT
ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57). கேபிள் டி.வி. உரிமையாளர். இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள திருப்பனாழ்வார் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (28), அருண் (25) ஆகியோர் சிவக்குமாரை தகாதவார்த்தைகளால் திட்டி அவரை தாக்கினர்.

இது தொடர்பாக சிவக்குமார் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்ய சென்றார். இதையறிந்த பிரசாந்த், அருண் ஆகியோர் அவரது பின்னால் போலீஸ் நிலையம் சென்றனர். எங்கள் மீது புகார் செய்யக் கூடாது என்று கூறி சிவக்குமாருக்கு மிரட்டல் விடுத்தனர்.

அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் கோவிந்த ராசு, இங்கு வந்து ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? என்று பிரசாந்த், அருண் ஆகியோரிடம் கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் போலீஸ்காரர் கோவிந்த ராசுவை தாக்கி அவரின் சட்டையை பிடித்து இழுத்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையறிந்ததும் அங்கிருந்த மற்ற போலீசார் கோவிந்த ராசுவை மீட்டனர்.

இது தொடர்பாக போலீஸ்காரர் கோவிந்த ராசு, ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சேத்தியாத் தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், அருண் ஆகியோரை கைது செய்தார்.

பின்னர் 2 பேரையும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பிரசாந்த், அருண் ஆகிய 2 பேரும் விருத்தாசலம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News