சீர்காழி அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
சீர்காழி:
தமிழகத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் செயல்பட்ட போதிலும் புதுச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்த போதிலும் மது கடத்தல் தொடர்ந்து வருகிறது.
சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் திருவெண்காடு போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர் அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து மோடடார் சைக்கிளில் தனித்தனியாக வந்த 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் புதுச்சேரி சாராய பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 450 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காரைக்கால் வருச்சிக்குடியை சேர்ந்த மாரிமுத்து (வயது 34). விவேக் (22) என்று தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து சாராய பாக்கெட்டுகளை யாருக்காக கடத்தி வந்தனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.