செய்திகள்

வீராணம் ஏரியில் கனமழை - விவசாயத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 106 கன அடி குறைப்பு

Published On 2018-08-31 23:39 IST   |   Update On 2018-08-31 23:39:00 IST
வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு இன்று 106 கன அடியாக குறைக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு காவிரி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,350 கன அடி தண்ணீர் வந்தது. இன்று 1,450 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய விட 100 கன அடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்கிறது.

வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக கடந்த 26-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 476 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 370 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய விட 106 கனஅடி குறைவு ஆகும்.

வீராணம் ஏரி அமைந்துள்ள பகுதியான லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் நேற்று இரவு திடீரென கன மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 4 மணி நேரம் நீடித்தது. வீராணம் ஏரி பகுதியில் பெய்த மழையின் அளவு 32 மி.மீ. ஆகும். கன மழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீராணம் ஏரியில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி முதல் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 அடி குறைவு ஆகும்.
Tags:    

Similar News